விருதுநகர் மாவட்டம் வீரச்சோழன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாகுளம் பகுதியில் கணவரை கொலை செய்த வழக்கில், அவரது மனைவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அருப்புக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மீனாகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (35) என்பவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது முத்துக்குமாரை அவரது மனைவி கலா (34) கொலை செய்ததாக வீரச்சோழன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதலில் சந்தேக மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பின்னர் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கு அருப்புக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் கலா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

