குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்றும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி பள்ளப்பட்டி கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 40 நாட்களாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
கடந்த ஜூலை 8-ஆம் தேதி மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டதாகவும், அதன்பிறகு போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். குடிநீர் பற்றாக்குறை காரணமாக உப்பு நீர் மற்றும் குடிநீரை வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.
குடிநீருக்காக மட்டும் தினமும் சுமார் ரூ.100 முதல் ரூ.200 வரை செலவு செய்ய வேண்டியிருப்பதால், தங்களது அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும், பள்ளப்பட்டி கிராமத்தில் தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை என்றும், இதுகுறித்து கிராம நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக் கோரி, கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

