தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களாக பணியாற்றி, பணி மூப்பு அடிப்படையில் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய மாதம் ரூ.2,000 சிறப்பு ஓய்வூதியம், 2026 பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்ட தொகையுடன் சேர்த்து நிலுவைத் தொகையாக வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.7,850 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று, ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் எனவும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

