குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தப் பணிகளை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், விருதுநகரில் தொழில் முனைவோர் மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டுக் கண்காட்சி தொடங்கியது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களாக கருதப்பட்டாலும், இப்பகுதிகளில் ஏராளமான தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.
பொறியியல் கல்லூரிகள் மூலம் திறமையான இளைஞர்கள் உருவாகி வருவதுடன், இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோர்களும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார். ஆடை தயாரிப்பு, சிறுதானிய உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
உற்பத்தியாளர்கள் – நிறுவனங்களை இணைக்கும் பாலம்
ஒருபுறம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் நிலையில், மறுபுறம் தொழில் நிறுவனங்கள் திறமையான பணியாளர்களை தேடி வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். அதேபோல், உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை சந்தைப்படுத்த வாய்ப்புகளை எதிர்பார்க்கும் நிலையில், நிறுவனங்கள் தரமான பொருட்களை தேடி வருகின்றன.
இந்த இடைவெளியை குறைத்து, உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்களை இணைக்கும் பாலமாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின்போது நடைபெற்ற B2B தொழில் சந்திப்புகளின் தொடர்ச்சியாக தற்போதைய கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ISRO உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பொருட்கள் வழங்க வாய்ப்பு
விருதுநகர் பகுதி உற்பத்தியாளர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைத்தால், விண்வெளித் துறை (ISRO), கூடங்குளம் அணுமின் திட்டம் (KKNPP), பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான உயர்தர உதிரிபாகங்களை தயாரித்து வழங்க முடியும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
குறு, சிறு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் இடையே மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இணைப்புப் பாலமாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் இலக்கு என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பயிற்சியின் மூலம் 11 மாணவர்கள் JEE Mains தேர்வில் தேர்ச்சி பெற்று IIT உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக அவர் கூறினார். NEET தேர்விலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனைகளை தொடர்ந்து பதிவு செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், 18 வயதுக்குட்பட்ட இளம் சிறார்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், அவர்களுக்கு சிறப்பு மறுவாழ்வுத் திட்டங்கள் மூலம் சமூகத்தில் நல்ல குடிமக்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
40 அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்பு
இந்தக் கண்காட்சியை தொழில் முனைவோர்களும் நிறுவனங்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் CSR நிதி வாயிலாக மாவட்டத்தின் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
கண்காட்சியில் ISRO, NLC, தென்னக ரயில்வே, கல்பாக்கம் அணுமின் நிலையம், இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலியம், அஞ்சல் துறை, GeM மற்றும் கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளிட்ட சுமார் 40 அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து பங்கேற்றுள்ளன.

