நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகரிலும் அனைத்து வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், புதிய ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள பாரபட்சங்களை நீக்க வேண்டும், ஓய்வூதிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முழக்கங்களை எழுப்பினர்.
விருதுநகர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

