உதகையில் இறைச்சிக் கழிவுகள் தேங்கியிருந்ததை அடிப்படையாகக் கொண்டு, உண்மை நிலையை ஆராயாமல் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டதால் இறைச்சிக் கடை வியாபாரி பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இறைச்சிக் கழிவுகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை எட்டின்ஸ் சாலையில் கடந்த 40 ஆண்டுகளாக A1 சிக்கன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கோழி இறைச்சி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.
வழக்கமாக கடையில் சேகரமாகும் இறைச்சிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் தினமும் வந்து எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 அல்லது 3 நாட்களாக கழிவுகளை சேகரிக்க பணியாளர்கள் வராததால், கடையில் இறைச்சிக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசியுள்ளது.
இறைச்சிக் கழிவுகளை கடைக்காரர்களே வேறு இடங்களில் கொட்டக்கூடாது என்பதால், அவற்றை முறையாக அகற்ற முடியாமல் கடை உரிமையாளர் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிப்பதற்காக கழிவுகளின் புகைப்படங்களை எடுத்து, தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர்களிடம் அனுப்பி வைக்குமாறு கடை உரிமையாளர் கேட்டுள்ளார். அந்த புகைப்படம் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டு, பின்னர் சமூக வலைதளங்களில் வேறு விதமாக பரவியதாக கூறப்படுகிறது.
இதில், இறைச்சிக் கடை முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது போன்ற தகவல்களுடன், வேறு புகைப்படங்களையும் இணைத்து சில சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் யூடியூப் செய்தி சேனல்களில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது.
இதனால் கடை உரிமையாளர் பைசல் பாதிக்கப்பட்டதுடன், வாடிக்கையாளர்களும் அவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான தகவலால் தனது வியாபாரமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நகராட்சி சார்பில் இறைச்சிக் கழிவுகளை சேகரிக்க பணியாளர்கள் கடந்த சில நாட்களாக வராததால் அவை தேங்கியிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கடையில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தினசரி கழிவுகளை அகற்ற கோரிக்கை
இதனிடையே நீலகிரி கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினரும் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து, இறைச்சிக் கடைகளில் உருவாகும் கழிவுகளை தினசரி முறையாக சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நகராட்சி அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்துவதுடன், இறைச்சிக் கழிவுகளை தினமும் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
இதற்கிடையே, நீலகிரி கோவை இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் முஸ்தபா மற்றும் கடை உரிமையாளர் பைசல் ஆகியோர் சம்பந்தப்பட்ட யூடியூப் செய்தி சேனல் மற்றும் பதிவிட்டவர்களை தொடர்புகொண்டு உண்மை நிலையை விளக்கியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பதிவு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை நிலையை விசாரிக்காமல் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிடுவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும், ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து உண்மை நிலையை உறுதி செய்த பின்னரே சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பதிவிட வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

