காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இரு மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்த 75-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லரை மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 75-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லரை மதுபான விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பெரம்பலூர் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வேண்டும், டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகளில் ஏற்படும் நிர்வாகச் செலவுகளை டாஸ்மாக் நிர்வாகமே முழுமையாக ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், பின்னர் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் சில்லரை மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குணசேகரன் பேட்டியளித்தார்.

