தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு விருதுநகரில் நாளை மற்றும் மறுநாள் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுவதாக தெரிவித்தார்.
ஊராட்சி அமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார். ஊராட்சித் தேர்தலை புதிய அரசு உடனடியாக நடத்த வேண்டும், கிராம ஊராட்சி செயலாளர்களை கிராம ஊராட்சி நிர்வாக அலுவலர்களாக நியமிக்க வேண்டும், முழு சுகாதாரத் திட்ட ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 150 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய, மாநில மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு, அவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அறிக்கையாக வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 125 நாட்களும், தமிழக அரசு 150 நாட்களும் வேலை வழங்கும் வகையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், நடைமுறையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 35 நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனால், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 150 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிதாக 127 ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்றும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களை புதிய கிராம ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்க வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ரமேஷ் தெரிவித்தார். தேவைக்கேற்ப தமிழகத்தில் புதிய மாவட்டங்களையும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட உள்ளதாக கூறினார்.
ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக புதிய ஓய்வூதிய அமைப்பை விரைவாக செயல்படுத்தும் முயற்சியை ஊழியர்கள் ஏற்க முடியாது என்றும் மாநிலத் தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.
அரசுக்கு ஊழியர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

