தமிழ்நாடு முதலமைச்சரால் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., முன்னிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு. செல்வகுமார், இ.கா.ப., உடனிருந்தார்.
அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்றடைவதை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, தங்க மோதிரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறை, அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும், பாதுகாப்பு அறை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
பயனாளிகளின் விவரங்களை முறையாகப் பதிவு செய்து பராமரிப்பதற்கான கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகள், கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை, கைரேகை பதிவு செய்யும் கருவிகள், QR குறியீடு இயந்திரங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், பயனாளிகள் காத்திருப்பு அறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்கும் நடைமுறை, மோதிரங்களை பாதுகாப்பாகப் பராமரித்தல், பயனாளிகள் தொடர்பான பதிவுகளை முறையாக மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து கட்டங்களிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு டாக்டர் சி. பழனி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ராம் கணேஷ், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

