விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த மீனா–மணிகண்டன் தம்பதியரின் 12 வயது மகள் விவேகா. இவர் பிச்சம்பட்டி பகுதியில் உள்ள டியூசன் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் சில தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சண்டையில் ஈடுபட்டிருந்த நாய்களில் ஒன்று திடீரென சிறுமி விவேகாவை கடித்துக் குதறியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து சிறுமியை அவரது குடும்பத்தினர் உடனடியாக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்.
பிச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி, டியூசன் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

