விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீலம்பட்டி கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுப் பாதையை பயன்படுத்திய விவகாரத்தில் தங்கள் மீது சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக கூறி பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
சீலம்பட்டி கிராமத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக, சீர்வரிசைப் பொருட்களை அப்பகுதியில் உள்ள பொதுப் பாதை வழியாக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஜீவராஜ், அப்பாதுரை உள்ளிட்ட சிலர் பொதுப் பாதையை பயன்படுத்தக்கூடாது எனக் கூறி அவர்களை தடுத்து நிறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதில் அவர் காயமடைந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து, தங்கள் மீது தொடர்ந்து சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்த புகார் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, தங்களுக்கு பாதுகாப்பும் நியாயமான நடவடிக்கையும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

