சாத்தூர் அருகே 200 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், 2 சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட சுமார் 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கார்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார், சாத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சாத்தூர்–சின்ன கொல்லப்பட்டி சாலையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 3 சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் அந்த கார்களை சோதனையிட முயன்றபோது, அவர்களை கண்டதும் அங்கிருந்த மர்ம நபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து 2 கார்களை அங்கேயே விட்டுவிட்டு, மற்றொரு காரில் மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பிச் சென்றனர். தொடர்ந்து போலீசார் அந்த 2 கார்களையும் சோதனையிட்டபோது, மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சோதனையில் சுமார் 200 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலைப் பொருட்களுடன் கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 2 சொகுசு கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தப்பிச் சென்ற மர்ம நபர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், இந்த கடத்தல் கும்பல் எந்தப் பகுதியைச் சேர்ந்தது, புகையிலைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, கடத்தல் பின்னணியில் முக்கிய நபர்கள் யாரேனும் உள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

