விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சுமார் 100 நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் தீவிரமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, மம்சாபுரம், வைத்தியலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரவலாக பலத்த மழை பெய்தது.
கடந்த நூறு நாட்களாக மழை இன்றி வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், நேற்றும் இன்றும் பெய்த தொடர் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

