விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து, அவரை தாக்கி பணம் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரிக்குடி அருகே உள்ள முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வ விநாயகம், காரியாபட்டிக்கு சென்று விட்டு தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் காரியாபட்டி–நரிக்குடி சாலையில் ஸ்ரீராம்பூர் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழிமறித்து லிப்ட் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செல்வ விநாயகம் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அருகில் உள்ள முட்புதர்களுக்குள் இருந்து சிலர் திடீரென வெளியே வந்து அவரை சூழ்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் செல்வ விநாயகத்தை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டதாக தெரிகிறது.
மேலும், அவரது செல்போனை தூக்கி எறிந்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த செல்வ விநாயகம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செல்வ விநாயகம் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் உள்ள சாலையில் பட்டப்பகலில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணம் பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் மர்ம கும்பலை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

