விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து, மாநாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். தற்போதைய ஆட்சியில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற போராட வேண்டிய அவசியம் இருக்காது என்றும், ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகள் உரிய முறையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார்.
மேலும், 125 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதற்காக தனி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தனி அலுவலர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்ததாகக் கூறிய செல்வம், தற்போது அந்த நிலை மாறியுள்ளது என்றார். ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை தன்னிடம் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அடுத்த மாநில மாநாடு நடைபெறும் போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டிய நிலை இல்லாமல், அவற்றை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு அமைய வேண்டும் என்றும் செல்வம் தெரிவித்தார்.
கிராமங்களில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஊராட்சி செயலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார். பல்வேறு சூழ்நிலைகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் தங்களிடம் குறைகளை கொண்டு வரும்போது “இது என்னுடைய துறை இல்லை” என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பாமல், உரிய முறையில் வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஊரக வளர்ச்சித் துறைக்கு தமிழக அரசு ரூ.29 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், எவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டாலும் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் ஊராட்சி செயலாளர்களின் செயல்பாடு முக்கியமானது என தெரிவித்தார்.
இதனை ரயில் உதாரணத்துடன் விளக்கிய செல்வம், “எத்தனை ஆயிரம் மக்கள் வேண்டுமானாலும் ரயிலில் பயணம் செய்யலாம். அந்த ரயிலை இயக்குபவர் முதல்வர் விஜய். நாங்கள் அனைவரும் அந்த ரயிலின் ஒரு பகுதிகள். ஆனால் அந்த ரயிலின் இன்ஜின் ஊராட்சி செயலாளர்களாகிய நீங்கள் தான். இன்ஜின் சரியாக இருந்தால்தான் ரயில் செல்ல வேண்டிய இடத்தை சரியாக சென்றடையும்” என பேசினார்.
கிராமப்புற மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சி செயலாளர்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் தெரிவித்தார்.

