நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தைத் தொடர்ந்து, சுற்றுலா சென்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறி, அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து நேபாளம் நாட்டிற்கு சுற்றுலா சென்ற 6 பேர், வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை பத்திரமாக கண்டுபிடித்து மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் செயல்படும் ‘மகாதேவ் கைலாஷ்’ சுற்றுலா ஏஜென்சி மூலம், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி சீனா மற்றும் நேபாளப் பகுதிகளுக்கு 49 பேர் கொண்ட குழு 15 நாள் சுற்றுப்பயணமாக புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்துக்கு முந்தைய நாள் காலை சுமார் 6 மணியளவில் சீன எல்லைப் பகுதியில் இருந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் சந்திரன் ஆகியோர் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அங்கிருந்து நேபாளம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு நேபாளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அவர்களுடன் இருந்த 6 பேரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
தொடர்பு துண்டிக்கப்பட்டவர்கள்
- மீனாட்சி – அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் தெரு, காஞ்சிபுரம்
- சந்திரன் – ஆட்சியர் அலுவலகப் பகுதி, காஞ்சிபுரம்
- அருணாச்சலம்
- லதா பானுமதி – மாமல்லன் நகர்
- சரஸ்வதி – மாமல்லன் நகர்
- கோபால் – மாமல்லன் நகர்
சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை திரும்ப வேண்டிய நிலையில், 24 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனால் 6 பேரும் பாதுகாப்பாக உள்ளார்களா என்ற அச்சம் குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ளது. அவர்களை விரைந்து கண்டுபிடித்து, பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் மனு அளித்துள்ளனர்.

