தேசிய தகுதி மற்றும் திறமை அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (NMMS) தேர்வில் திருநெல்வேலி மாவட்ட மாணவர்கள் தொடர்ந்து மாநில அளவில் முன்னிலை பெற்று வரும் நிலையில், அவர்களின் கற்றல் திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி ஒன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய, தகுதியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் NMMS தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வில் திருநெல்வேலி மாவட்ட மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கடந்த 2024-25ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் இருந்து 508 மாணவர்கள் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்தனர். அதேபோல, அண்மையில் வெளியான 2025-26ஆம் கல்வியாண்டு தேர்வு முடிவுகளிலும் 659 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் மீண்டும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் தேர்ச்சிக்குத் துணையாகவும், வரும் ஆண்டுகளில் மேலும் பல மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற வழிகாட்டவும் பழவூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை மாரியம்மாள் புதிய செயலி (App) ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த செயலியில் மாணவர்களின் எளிமையான கற்றலுக்காகப் பாடங்கள் 12 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் மற்றும் மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு பயிற்சி பெறும் வகையிலான விளக்கங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்த புதிய செயலியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், செயலி உருவாக்கத்திற்கு உதவிய ஆசிரியர் குழுவினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய செயலியின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள், எவ்வித கட்டணமும் இன்றி NMMS தேர்வுக்கு தங்களை முறையாகத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும், இது வரும் ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தை மேலும் உயர்த்த உதவும் என்றும் கல்வித்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செய்திகள்
NMMS தேர்வில் தொடர்ந்து தமிழக அளவில் நெல்லை முதலிடம் : மாணவர்களுக்காக புதிய செயலி அறிமுகம்
🕒 28 ஆக., 2026, 11:23 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •NMMS தேர்வில் தொடர்ந்து தமிழக அளவில் நெல்லை மாவட்டம் முதலிடம் பிடித்து வரும் நிலையில், மாணவர்களின் தேர்வு தயாரிப்புக்கு உதவும் புதிய செயலியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
