நெல்லையில் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை குற்றவாளிகள் என அறிவித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவர்களில் ஒருவருக்கு மரண தண்டனையும், மற்ற இருவருக்கு முறையே 20 மற்றும் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பெயிண்டிங் பணி நடைபெற்றபோது, அங்கு பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (27) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று தனது அக்கா வீட்டிற்கு செல்லலாம் என்றும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி முனீஸ்வரன் மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்திலேயே தன்னை அழைத்துச் செல்வதாக மாணவி நம்பியிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பின்னர் முனீஸ்வரன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அங்கு இருந்த அவரது நண்பர்களான நெல்லை கொக்கிரகுளம், கீழவீரராகவபுரத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி (27), முருகேசன் (27) ஆகியோரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதில் சின்னக்குட்டி மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் முனீஸ்வரன், சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுரேஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
மேலும், குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், குற்றவாளிகள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காகவும் 3 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இறுதி தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியான சின்னக்குட்டிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். மேலும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

