அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நுகர்வோர் நீதிமன்றத்தை திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்துடன் இணைத்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் தனியாக செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றத்தை, திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்துடன் இணைத்து செயல்பட வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்தை திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்துடன் இணைப்பதால் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இதனால் தேவையற்ற அலைச்சல் மற்றும் கூடுதல் செலவுகள் ஏற்படும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
எனவே, அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்தை திருவாரூர் நீதிமன்றத்துடன் இணைக்கும் உத்தரவை உடனடியாக ரத்து செய்து, அரியலூர் மாவட்டத்திலேயே நுகர்வோர் நீதிமன்றம் தனித்துவத்துடன் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பேட்டி: தமிழ்மாறன், தலைவர், ஜெயங்கொண்டம் வழக்கறிஞர் சங்கம்.

