விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே சாலையில் படுத்திருந்த அடையாளம் தெரியாத முதியவர் மீது அரசு பேருந்து ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரியாபட்டி பகுதியில் அடையாளம் தெரியாமல் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் அந்த முதியவர், நேற்று இரவு பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையோரத்தில் படுத்திருந்ததாக தெரிகிறது.
அப்போது மதுரையில் இருந்து காரியாபட்டிக்கு வந்த அரசு பேருந்து, பேருந்து நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் படுத்திருந்த முதியவர் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த முதியவர் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் படுத்திருந்த அடையாளம் தெரியாத முதியவர் அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவம் காரியாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

