விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுத் திடலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் இந்த ஆண்டு 39-வது முறையாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி 5 ரதங்களில் 6 விதமான விநாயகர் சிலைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரு ரதத்தில் சித்தி புத்தி மகா கணபதி மற்றும் ஐஸ்வர்ய கணபதி என இரண்டு பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற ரதங்களில் நந்தி பகவானிடம் பொதுமக்களுக்காக வேண்டுதல் வைக்கும் கணபதி, பள்ளிகொண்ட பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் சாமரம் வீசி வரவேற்கும் கணபதி, ஈஷா ஆதியோகி சிவபெருமானை நோக்கி வழிபாடு செய்யும் கணபதி மற்றும் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் கணபதி என வித்தியாசமான கருத்துகளில் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவு, தேங்காய் நார் உள்ளிட்ட இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், தண்ணீரில் கரையும் வாட்டர் பெயிண்ட் வகை வண்ணங்கள் மூலம் சிலைகளுக்கு கண்களைக் கவரும் வகையில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் திடலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அங்கு 8 நாட்கள் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்வேறு ஆன்மிக மற்றும் சமூக நல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
விழாவையொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் 3 வேளை அன்னதானம், இலவச திருமணங்கள், ஆதரவற்ற மற்றும் இயலாதவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவின் நிறைவாக வரும் 14-ஆம் தேதி இரவு விநாயகர் சிலைகள் கண்மாயில் கரைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

