விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளப்பட்டி முதல் நிலை ஊராட்சியில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகள் மற்றும் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதாகவும், அவை தீ வைத்து எரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி, ‘வீ த லீடர்’ அமைப்பினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பள்ளப்பட்டி முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளின் அருகே கடந்த பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு தேங்கும் குப்பைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குப்பைகள் மற்றும் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதிகளவில் புகை மற்றும் நச்சு வாயுக்கள் வெளியேறுவதாகவும், இதனால் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் அமைப்பினர் தெரிவித்தனர். தொடர்ந்து குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தப் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதுடன், முறையான கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘வீ த லீடர்’ அமைப்பின் சார்பில் ரோஹித் தலைமையிலான நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கை மனுவை வழங்கினர்.
மேலும், பள்ளப்பட்டி பகுதியில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக அமைப்பின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

