விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வரும் சின்னத்தம்பி பட்டாசு ஆலையில் நேற்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாடசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்களான ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, செல்வமாரியின் கணவர் முரளீஸ்வரன் மற்றும் ஆலையின் மேலாளர் சூர்ய பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது, வெடிபொருட்களை கவனக்குறைவாக கையாண்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் ஆலையின் மேலாளர் சூர்ய பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வழக்கில் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ள ஜெயசக்தி, செல்வமாரி மற்றும் முரளீஸ்வரன் ஆகிய 3 பேரும் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

