தென்காசி மாவட்டம் கடையம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை மர்ம நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையம் அருகிலுள்ள துப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (42), இன்று தனது இருசக்கர வாகனத்தில் அம்பாசமுத்திரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அம்பாசமுத்திரம் நான்கு வழிச்சாலை சந்திப்புப் பகுதியில் வந்தபோது, மர்ம நபர் ஒருவர் மாயாண்டியை அரிவாளைக் காட்டி திடீரென வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாயாண்டி, தனது வாகனத்தைக் கீழே போட்டுவிட்டுத் தப்பி ஓட முயன்றுள்ளார்.
அப்போது, அவரை விடாமல் விரட்டிச் சென்ற அந்த நபர், மாயாண்டியின் முகம், கை மற்றும் முதுகுப் பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மாயாண்டியை, மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக உறவினர் ஒருவரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட நபர் யார், தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

