உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் நீர் பங்கீட்டு விகிதத்தின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று டெல்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு காவலில் வைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி உறையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராடுவதற்கான உரிமை உள்ளது. ஆனால், தமிழகத்தில் விவசாயிகள் அடிமைகளைப் போல நடத்தப்படுகின்றனர். தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்கக் கோரியும் டெல்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்” என்றார்.
மேலும், “எங்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம். வேண்டுமென்றால் எங்களை சிறையில் அடைத்துக் கொள்ளலாம். விவசாயிகள் மீது போலீசார் தொடர்ந்து அராஜகப் போக்கில் நடவடிக்கை எடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்தார்.

