அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரணவாசி ஊராட்சியில் மருதையாற்றுப் பகுதியில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி, இ.ஆ.ப., தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
நீர்வளத்துறை சார்பில், தன்னார்வ அமைப்பான எக்ஸ்னோரா – சோலைவனம் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் காணப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், பொதுமக்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களையும் உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருதையாறு, கொள்ளிடம் ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம் தம்பிரான்பட்டி கிராமம் அருகே பச்சைமலைத் தொடரின் கிழக்குச் சரிவில் உருவாகும் இந்த ஆறு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வழியாக சுமார் 70.40 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து, அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி அருகே கொள்ளிடம் ஆற்றுடன் கலக்கிறது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மருதையாற்றில் நீர்வரத்து ஏற்படுகிறது. துறைமங்கலம் ஏரி உபரிநீர், மூங்கில்பாடி ஓடை, எலந்தங்குழி ஓடை, சாத்தானூர் ஓடை, சம்பா ஓடை, வஞ்சியத்தான் ஓடை, மாணிக்கவாசகர் ஓடை, கல்லாறு ஓடை, உப்போடை உள்ளிட்ட பல்வேறு ஓடைகள் மருதையாற்றின் முக்கிய நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன.
இதனால், மருதையாற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் சீமைக் கருவேல மரங்கள் வளராத வகையில் தொடர்ந்து கண்காணித்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.
அதேபோல், பொதுமக்களும் தங்களது பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றி, சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா. மல்லிகா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

