அரியலூர் மாவட்டத்தில் முக்கிய போக்குவரத்துப் பாதையாக விளங்கும் வி.கைகாட்டி–அரியலூர் நெடுஞ்சாலை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, சுமார் 100 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட ஆலமரம் வெட்டி அகற்றப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வி.கைகாட்டி–அரியலூர் சாலை, அரியலூர் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்துத் தடமாக உள்ளது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு சிமென்ட் ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் ஏராளமான கனரக லாரிகள் தினந்தோறும் இந்தச் சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து, உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைத்து விபத்துகளைத் தடுக்க சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் இருந்த பனை மற்றும் புளிய மரங்கள் உள்ளிட்ட மரங்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலையோரத்தில் பல தலைமுறைகளைக் கடந்து செழித்து வளர்ந்திருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட ஆலமரமும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அண்மையில் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நிழல் அளித்ததுடன், ஏராளமான பறவைகள் மற்றும் சிறு உயிரினங்களுக்கு புகலிடமாகவும் விளங்கிய அந்தப் பழமையான ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிகள் அவசியமானதாக இருந்தாலும், நூற்றாண்டு பழமையான மரங்களை பாதுகாக்க மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சாலைப் பணிகளின்போது பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மரங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

