திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த நடிகர் கே.பி.ஒய். பாலா, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது தனது அடுத்த திரைப்படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகளில் சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் கூறினார்.
சட்டமன்ற அரசியல் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “சாதாரணமாக எல்லோரையும் போல நானும் அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கிறேன். அதைப் பற்றி பேசுவதற்கு எனக்குத் தகுதி இல்லை. நான் ஒரு சாதாரண ஆள்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து பேசிய கே.பி.ஒய். பாலா, “மற்ற எல்லோரையும் போல நடிகர் விஜய் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்” என்றார்.
மேலும், “என் மூச்சு இருக்கும் வரை இந்த இடத்தில் இருப்பதற்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் காரணம். கடைசி வரை அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் சம்பாதிப்பதில் 90 சதவீதத்தை மக்களுக்காகவே செலவு செய்வேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்துப் பேசிய அவர், இதுகுறித்து மக்களுக்கே நன்றாகத் தெரியும் என்றும், அனைவரும் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வுடன்தான் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

