விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போதைக்கு எதிரான மெகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 1,000 பள்ளி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் சுதந்திர தினம், போதை ஒழிப்பு மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
300 அடி நீள தேசியக் கொடியுடன் பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி அருகே பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்ற மாணவர்கள் 300 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடியை இருபுறமும் பிடித்தபடி பேரணியாக சென்றனர்.
மேலும், மாணவர்கள் கைகளில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, போதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
3 கி.மீ. தூரம் நடைபெற்ற விழிப்புணர்வு
தெற்கு ரத வீதியில் தொடங்கிய பேரணி, கீழ ரத வீதி, வடக்கு ரத வீதி, மேல ரத வீதி உள்ளிட்ட நான்கு ரத வீதிகள் வழியாக சென்றது.
சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில், பள்ளி மாணவ–மாணவிகளுடன் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பேரணியின் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து பங்கேற்ற மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

