விருதுநகர் அருகே ஆட்டு மந்தை மீது மோதாமல் இருக்க முயன்றபோது, 1,650 பெட்டிகள் கொண்ட மதுபான சுமையுடன் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி 1,650 மதுபானப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற லாரியை, வந்தவாசியைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். விருதுநகர் அருகே உள்ள ஆவல்சூரன்பட்டி விலக்கு பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென ஆட்டு மந்தை குறுக்கிட்டுள்ளது.
ஆடுகளின் மீது லாரி மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் வாகனத்தைக் கட்டுப்படுத்த தீவிரமாக முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன; மேலும் ஏராளமான பாட்டில்கள் சாலையோரத்தில் சிதறின.
விபத்து நடந்த பகுதியிலிருந்த சிலர், சாலையில் சிதறிக் கிடந்த மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தி, மதுபாட்டில்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

