திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள நைனார் குளம் அருகே மாநகராட்சி சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பூங்கா அருகிலேயே பேருந்து நிறுத்தமும், மதுபானக் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாலை நேரங்களில் மதுபானக் கடையில் மதுபானங்களை வாங்கும் சிலர், பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அமர்ந்து மது அருந்துவதாகவும், பின்னர் காலி மதுபாட்டில்களை பூங்கா பகுதியில் வீசி செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பூங்கா வளாகம் முழுவதும் ஆங்காங்கே மதுபாட்டில்கள் கிடப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் அடிப்படையில், நைனார் குளம் பூங்கா அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடையை ஆய்வு செய்ததாக வீதி லீடர் அமைப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து, நைனார் குளம் பூங்கா அருகே உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் அல்லது மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வீதி லீடர் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. வீதி லீடர் அமைப்பின் தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த மனுவை அளித்தனர். பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடமாகவும் மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்திகள்
நெல்லை நைனார் குளம் பூங்கா அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கலெக்டரிடம் மனு.
The News Outlook
🕒 11 ஆக., 2026, 08:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

