நெல்லையில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி பணம் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் 2 இளம் பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாநகரைச் சேர்ந்த வேம்பு என்பவரது மனைவி தங்கமாரி (47), மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு தெரிந்த காரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி (23) என்பவர் மூலம் முத்துராம் மற்றும் அவரது மனைவி பூரணசெல்வி (30) ஆகியோர் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். அவர்கள் தாங்கள் மல்டிவெல் மார்க்கெட்டிங் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய தங்கமாரி, முதலீடு செய்வதற்காக பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் கூறியபடி வருமானம் கிடைக்கவில்லை என்றும், முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் காரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி (23), தச்சநல்லூர் நல்லமேய்ப்பர் நகரைச் சேர்ந்த பூரணசெல்வி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இதேபோல் வேறு நபர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாநகர காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என ஆசை காட்டி மோசடி – 2 பெண்கள் கைது
The News Outlook
🕒 12 ஆக., 2026, 09:10 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

