விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த பேட்டரி கார் கடந்த ஒரு மாதமாக பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிப்போர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் இந்த சந்திப்பு நிலையம் வழியாக வந்தே பாரத், கன்னியாகுமரி, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இருப்பினும், இந்த ரயில் நிலையத்தில் லிப்ட் அல்லது எஸ்கலேட்டர் வசதி இல்லாததால், முதல் பிளாட்பாரத்தில் இருந்து இரண்டாம் பிளாட்பாரத்திற்கு செல்லும் பயணிகளுக்கு ரூ.10 கட்டணத்தில் பேட்டரி கார் சேவை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த ஒரு மாதமாக அந்த பேட்டரி கார் பழுதடைந்து செயலிழந்த நிலையில் இருப்பதால், படிக்கட்டுகளை ஏறி இறங்க வேண்டிய கட்டாயத்தில் பயணிகள் உள்ளனர். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுடையோர் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் உடனடியாக பேட்டரி காரை சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

