“இன்னும் கொஞ்சம் குடும்பம் கிடைத்துவிட்டது” – நெகிழ்ந்த ஒலிம்பிக் நாயகி
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது கணவர் வெங்கட தத்தா சாயுடன் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனை சென்னையில் சந்தித்து இரவு உணவு அருந்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பி.வி.சிந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, இந்திய விளையாட்டு உலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். 2024 டிசம்பர் 22-ஆம் தேதி வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், சென்னைக்கு வந்திருந்த பி.வி.சிந்து தனது கணவருடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சந்தித்துள்ளார். நால்வரும் ஒன்றாக இரவு உணவு அருந்தியதுடன், வாழ்க்கை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து பி.வி.சிந்து தனது சமூக வலைதளப் பதிவில், “அழகான மாலை, அற்புதமான உணவு, மனம் திறந்த உரையாடல்கள், முடிவில்லாத சிரிப்புகள்” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், சில இரவு விருந்துகள் ஒருவரைப் பற்றிய பார்வையையே மாற்றிவிடும் என்றும், நண்பர்களாக சந்தித்து வாழ்க்கை, காதல் உள்ளிட்ட பல விஷயங்களை பேசி முடித்த பிறகு, நீண்ட காலமாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் சிந்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஏற்கனவே தனது அன்புக்குரியவர்களால் தனக்கு சொந்த ஊர் போல இருப்பதாக கூறியுள்ள சிந்து, இந்த சந்திப்புக்குப் பிறகு சென்னையில் தனக்கு “இன்னும் கொஞ்சம் குடும்பம் காத்திருக்கிறது” என்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை அன்பானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிந்துவின் பதிவுக்கு நயன்தாராவும் அன்புடன் பதிலளித்துள்ளார். விக்னேஷ் சிவனும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். விளையாட்டு மற்றும் திரையுலகைச் சேர்ந்த இந்த பிரபலங்களின் சந்திப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

