கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பரதநாட்டியம் ஆடியபடியே மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுப் புதிய சாதனை படைத்துள்ளனர்.
கருமத்தம்பட்டியைச் சேர்ந்த 'ரங்காஸ் அகாடமி' பரதநாட்டியப் பள்ளி சார்பில், 'டான்ஸ்சத்தான்' (Dancethon) என்ற பெயரில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் 3 வயது முதல் 15 வயது வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குப் பரதநாட்டியம் ஆடியபடியே மாரத்தான் ஓடினர்.
இதுதொடர்பாக ரங்காஸ் பரதநாட்டியப் பள்ளியின் நிறுவனரும், நடன ஆசிரியருமான சுபா வசந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தற்போது சமூகத்தில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசும் இதற்காகப் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அரசின் இந்த முன்னெடுப்பில் எங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கில், கலை வடிவம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டோம்.
சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குப் பரதநாட்டிய முத்திரைகளுடன் ஆடிக்கொண்டே மாரத்தான் ஓடுவது என்பது மிகவும் சவாலான காரியம். இருப்பினும், எங்களது நடனப் பள்ளி மாணவர்கள் கடந்த மூன்று வாரங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு, இச்சாதனையை அர்ப்பணிப்புடன் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்விற்காக இது போன்றதொரு பரதநாட்டிய மாரத்தான் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்."
தொடர்ந்து பேசிய அவர், தங்கள் அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்:
"தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் உரிய அனுமதி வழங்கினால், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, கோவையில் மிக பிரம்மாண்டமான முறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான 'கின்னஸ் சாதனை' முயற்சியை மேற்கொள்ளத் தயாராக உள்ளோம். அதேவேளையில், தற்காலப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கண்காணிப்பது அவசியமாகிறது. கண்காணிப்புக் குறைபாடே பல நேரங்களில் குழந்தைகளைப் போதைப் பழக்கத்திற்கு ஆளாக்குகிறது."
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற முழு ஆதரவு நல்கிய கருமத்தம்பட்டி காவல்துறை, கிங் உடற்பயிற்சி கூடம், ஸ்ரீ கவி பியூட்டி பார்லர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

