தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறுகையில், "துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசு தனது உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது உண்மைதான். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் பொறுப்பில் உள்ளனர்" என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மீதமுள்ள 11 பல்கலைக்கழகங்களில் நிலவும் துணைவேந்தர் காலியிடங்களை நிரப்ப, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நிரந்தரத் தீர்வு காண்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், "நீட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு தன் கோரமுகத்தைக் காட்டி வருகிறது. இருப்பினும், தமிழக மக்களின் நலனையும் மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முதலமைச்சர் தலைமையிலான அரசுப் பொறுப்புடன் கவனமாகச் செயல்பட்டு வருகிறது. மாநில உரிமை, தமிழர் கலாச்சாரம், பண்பாடு மற்றும் தனித்தன்மையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்காமல், தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மாநில அரசும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து துணை நிற்பார்கள்" என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீனின் மகன் கலீலூர் ரஹ்மான் மறைவுக்கு அமைச்சர் விஸ்வநாதன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவரது மறைவு மிகுந்த வேதனையும் துயரமும் அளிப்பதாக அவர் கூறினார்.

