சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/பழனி சண்முக நதியை மீட்டெடுக்கும் இளைஞர்கள்: எம்.எல்.ஏ பாராட்டு!
அரசியல்

பழனி சண்முக நதியை மீட்டெடுக்கும் இளைஞர்கள்: எம்.எல்.ஏ பாராட்டு!

🕒 7 செப்., 2026, 06:01 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
பழனி சண்முக நதியை மீட்டெடுக்கும் இளைஞர்கள்: எம்.எல்.ஏ பாராட்டு!

AI Highlights

  • பழனி சண்முக நதியை மீட்டெடுக்க இளைஞர்கள் தீவிர தூய்மைப் பணி! பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ ரவி மனோகரன், அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பக்தர்களின் முக்கிய புனித தீர்த்தமாக விளங்கி வரும் சண்முக நதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ‘We the Leaders’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். “நம் நதி… நம் பொறுப்பு!” என்ற முழக்கத்துடன் தொடர்ந்து 2-வது வாரமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சண்முக நதியில் புனித நீராடுவதுடன், தீர்த்தத்தையும் எடுத்துச் செல்கின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கும் சண்முக நதியின் தீர்த்தம் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

இத்தகைய ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சண்முக நதி, போதிய பராமரிப்பின்றி நெகிழிப் பொருட்கள், துணிகள், பூஜைப் பொருட்கள், ஆகாயத்தாமரை மற்றும் முட்செடிகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் தேங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நதியை பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் நோக்கில் ‘We the Leaders’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தன்னார்வ தூய்மைப் பணியை தொடங்கினர்.

2-வது வாரமாக நடைபெற்ற தூய்மைப் பணி

இந்நிலையில், 2-வது வாரமாக இன்று அதிகாலை 6 மணி முதல் சண்முக நதியில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று, நதியில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள், ஆகாயத்தாமரை மற்றும் முட்செடிகளை அகற்றினர்.

இந்தப் பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன் நேரில் சென்று பார்வையிட்டார். தன்னார்வலர்களின் முயற்சியை பாராட்டிய அவர், சண்முக நதியை மீட்டெடுக்கும் பணிக்கு அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

“சண்முக நதி வெறும் நதி அல்ல; புனித தீர்த்தம்”

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ரவி மனோகரன், சண்முக நதி பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் ஆன்மிக வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

காவடி முத்தரித்தல், தோஷம் கழித்தல், புனித நீராடல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் சண்முக நதிக்கு வருவதாக கூறிய அவர், இத்தகைய சிறப்பு வாய்ந்த நதி தற்போது பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு கழிவுகளால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

எந்தவித அரசியல் நோக்கமோ, சுயநல நோக்கமோ இல்லாமல் இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றும், ‘We the Leaders’ அமைப்பினருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்

சண்முக நதியை மீட்டெடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் எம்.எல்.ஏ. ரவி மனோகரன் தெரிவித்தார்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சண்முக நதியை தூர்வாரி, முழுமையாக தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பழனி வையாபுரி குளம் மற்றும் இடும்பன் குளத்தையும் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக விரைவில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பக்தர்களுக்கு எம்.எல்.ஏ. வேண்டுகோள்

அரசு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நதியை சுத்தப்படுத்தினாலும், அதனை தொடர்ந்து தூய்மையாக பராமரிப்பதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கும் முக்கிய பொறுப்பு இருப்பதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

புனித நீராடல் மற்றும் தோஷம் கழித்தல் உள்ளிட்ட வழிபாடுகளுக்காக வரும் பக்தர்கள் துணிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர கழிவுகளை நதியில் வீசாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிக்காக கலசம் முத்தரித்தல், தோஷம் கழித்தல் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு தனித்தனியாக படித்துறைகள் மற்றும் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அந்தப் பகுதிகளில் கழிவுகளை சேகரிப்பதற்காக குப்பைத் தொட்டிகள் அமைத்து, தினசரி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

சண்முக நதியை மீண்டும் அதன் பழைய புனித நிலைக்கு கொண்டு வர அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என எம்.எல்.ஏ. ரவி மனோகரன் உறுதியளித்தார்.

ஆய்வின்போது ‘We the Leaders’ அமைப்பைச் சேர்ந்த கனகராஜ், ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவையைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔