பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் செல்வம் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அண்மையில் நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த 8 குழந்தைகளின் வாழ்நாள் முழுமைக்குமான கல்வி மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு உழைத்த எளிய தொண்டர்களுக்கே போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
விருதுநகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 500 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ செல்வம், "கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தாய், தந்தையரை இழந்து ஆதரவற்று நின்ற 8 குழந்தைகளையும், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இந்த மண்ணில் வைத்துத் தத்தெடுக்கிறோம். அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமான கல்வி மற்றும் பராமரிப்புச் செலவுகள் முழுவதையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
காமராஜர் பெயருக்குப் பெருமை:
தொடர்ந்து உரையாற்றிய அவர், "முந்தைய ஆட்சிகளில் பலரும் தங்கள் பெயர்களையும், குடும்பத்தினரின் பெயர்களையும் அரசுத் திட்டங்களுக்குச் சூட்டிக்கொண்டனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், உண்மையாக உழைத்த தலைவரான காமராஜரின் பெயரையே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்குச் சூட்டிப் பெருமைப்படுத்தினார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பலர் வாய்ப்புக் கேட்டபோதும், 'கட்சிக்காகவும் மக்களுக்காகவும் கொடி கட்டி, போஸ்டர் அடித்த எளிய தொண்டனுக்கே சீட்' என்று வழங்கி எங்களைப் போன்ற சாமானியர்களைச் சட்டமன்ற உறுப்பினராக்கினார்" எனக் குறிப்பிட்டார்.
உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள்:
தற்போதுள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த செல்வம், "விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படைத் தேவைகள் இன்னும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. பஞ்சாயத்துகளில் மரக்கன்றுகள் நட்டதாகவும், நகராட்சியில் கொசு மருந்து தெளித்ததாகவும் கூறி கோடிக்கணக்கில் முறைகேடான கணக்குகள் காட்டப்பட்டுள்ளன" எனக் குற்றம்சாட்டினார்.
உழைத்தவர்களுக்கே முன்னுரிமை:
மேலும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசுகையில், "இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. எவ்வளவு பெரிய மிட்டா மிராசுதாரரோ அல்லது செல்வாக்கு படைத்தவரோ வந்தாலும் அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கிடையாது. மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படாது. நமது கழகத் தலைவருக்காகவும், இயக்கத்திற்காகவும் களத்தில் நின்று உண்மையாக உழைத்த எளிய தொண்டர்களுக்கு மட்டுமே கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர், வார்டு உறுப்பினர், சேர்மன் மற்றும் துணைச் சேர்மன் பதவிகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும். விருதுநகர் தொகுதியைத் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலேயே சிறந்த முன்மாதிரித் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

