விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய்-சேய் நலப்பிரிவு கட்டடங்களைத் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மருத்துவமனைக் கட்டடத்தில், 50 படுக்கை வசதிகளுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவப் பிரிவு, பிரசவ அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் பொது அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திறப்பு விழாவைத் தொடர்ந்து, புதிய கட்டடத்தை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குத்துவிளக்கேற்றி நேரில் பார்வையிட்டார். மேலும், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நோயாளிக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, "புதிய மருத்துவமனைக் கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ வசதிகளைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்; அக்குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்" என்று உறுதியளித்தார்.

