தமிழகத்தில் மதுபானங்களின் விற்பனை மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ என்ற புதிய வரியை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மதுபான நுகர்வு மற்றும் அதனால் உருவாகும் கண்ணாடி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதுடன், மதுப் பழக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் மறுவாழ்வு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் விளக்கத்தின்படி, புதிய வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல், மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கும் இந்த நிதி ஒதுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய தீர்வையை நடைமுறைப்படுத்தும் வகையில், 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

