ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் அமைச்சர் வன்னியரசு நெல்லையில் உறுதி காதல் திருமணம் செய்து கொண்டு தாக்குதலுக்கு உள்ளாகி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆகாஷை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் அருகே சிவகாமிபுரத்தில் ஆகாஷ்–சுமிதா காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வந்துள்ளனர். இருவரும் எம்.பி.சி. சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமிதாவின் தந்தை ஆகாஷை கொலை செய்ய முயன்றதாகவும், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆணவக் கொலைகள் எஸ்.சி. சமூகத்தினரிடையே மட்டுமல்லாமல் பி.சி., எம்.பி.சி. மற்றும் பல்வேறு சமூகங்களுக்கு இடையிலும் நடைபெறுகின்றன. எனவே அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வெளியிட்டுள்ளோம். கே.என்.பாட்ஷா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று சட்ட வடிவம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்குவது தொடர்பான பிரச்சினை கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.டி. சான்றிதழை ஒரு மாதத்திற்குள் வழங்கவும், எஸ்.சி. சான்றிதழை ஒரு வாரத்திற்குள் வழங்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மானுடவியல் ஆய்வுக்காக 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ்கள் தொடர்பான புகார்களையும் ஆய்வு செய்து வருகிறோம். சான்றிதழ் இல்லாததால் பள்ளிகளில் காட்டுநாயக்கர் சமூக மாணவர்களை வெளியேற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்திற்கான ரூ.466 கோடி நிதி மற்றும் ரூ.36 கோடி கல்வி உதவித்தொகையை வழங்கக் கோரியுள்ளோம். படுகா சமூகத்தை மீண்டும் எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பது தொடர்பான கோரிக்கையும் கவனத்தில் உள்ளது சாதி உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தடுப்பதுடன், வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இதற்காக திருநெல்வேலியில் கலைத்துறை பயிற்சி மையமும், காவல்துறை உள்ளிட்ட பணிகளுக்கான பயிற்சி மையமும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட இளைஞர்களுக்கு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாஞ்சோலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடிநீர், ரேஷன், மின்சாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் அரசு கவனத்தில் எடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு மக்களுடன் கலந்துரையாடி தீர்வு காணப்படும். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் சுமார் 4,000 வெளிநோயாளிகள் வரும் நிலையில் கூடுதல் எம்.ஆர்.ஐ. இயந்திரம் தேவை என்ற கோரிக்கை சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இல்லை. ஆனால் இடம் தொடர்பாக மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துகளையும் அரசு கவனத்தில் கொள்ளும். மக்களின் உணர்வுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. வரவிருக்கும் தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அதையே தானும் வழிமொழிவதாக அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்
அரசியல்
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் அமைச்சர் வன்னியரசு உறுதி
🕒 14 செப்., 2026, 04:59 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் அமைச்சர் வன்னியரசு நெல்லையில் உறுதி
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
