விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம்சாட்டியும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் விருதுநகர் தேசபந்து திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, விவசாயம் மற்றும் பட்டாசுத் தொழிலின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டு விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டிலும், குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திலும் விவசாயத்திற்கு அடுத்தபடியாகப் பிரதான வாழ்வாதாரமாக விளங்குவது பட்டாசுத் தொழிலாகும். சிவகாசி, விருதுநகர், வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் பிரம்மாண்டமாக இயங்கி வந்த இத்தொழில், இன்றைக்குத் தவெக ஆட்சியில் கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்த அவல நிலை மாற வேண்டுமெனில், தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்."
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என விமர்சனம்:
"5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்குப் பாதி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது 5 ஏக்கருக்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு வெறும் ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், மாணவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, விலைவாசி குறைப்பு மற்றும் குளிர்சாதனப் பேருந்துகள் என அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மின்சாரக் கட்டணம், சொத்து வரி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன."
அதிமுக ஆட்சியின் சாதனைகள்:
"முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.21,000 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தவர்; கஜா புயல் பாதிப்புகள் மற்றும் மீத்தேன் திட்டப் பாதிப்புகளிலிருந்து டெல்டா பூமியையும் விவசாயிகளையும் பாதுகாத்தவர். இரண்டு ஆண்டு காலம் கரோனா பேரிடரால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும், எவ்வித கூடுதல் வரியும் விதிக்காமல் மக்களைப் பாதுகாத்தார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி ஏழை எளிய மாணவர்களை மருத்துவர்களாக்கியதும், ஒரே ஆட்சியில் 18 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்ததும் அதிமுக அரசுதான்."
'ரீல்ஸ்' ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்:
"சினிமாவில் நடிப்பதைப் பார்த்து மக்கள் ஏமாந்து வாக்களித்துவிட்டனர். இன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், அமைச்சர்கள் என தவெக நிர்வாகிகள் அனைவரும் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல் வெறும் 'ரீல்ஸ்' மட்டுமே பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 'ரீல்ஸ்' பார்த்தால் மக்களுக்கு உணவு கிடைத்துவிடுமா? இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.
தமிழ்நாட்டு மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், பட்டாசுத் தொழிலாளர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் முழக்கம், உறங்கிக் கொண்டிருக்கும் அரசின் செவிகளுக்கு எட்ட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

