விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நில அளவீடு செய்ய வந்த தனியார் நிறுவன ஊழியர்களை கிராம மக்கள் துரத்தியடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சூரனூர் ஊராட்சிக்குட்பட்ட கோவிலாங்குளம் பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 41 ஏக்கர் நிலத்தில் சோலார் மின் உற்பத்தி திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காரியாபட்டி துணை வட்டாட்சியர் ஜெயராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்ய வருகை தந்தனர்.
இதனை அறிந்த கோவிலாங்குளம், உடுப்புகுளம் மற்றும் ஆவாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு, நில அளவீட்டுப் பணிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சோலார் திட்டம் அமையவுள்ள பகுதி விவசாய நிலங்கள் மற்றும் கண்மாய் நீர்வரத்துப் பாதையை உள்ளடக்கியது என்றும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கண்மாய்க்கான நீர்வரத்து தடைபட்டு விவசாயமும் நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, நிலத்தை அளவிட அனுமதி மறுத்து அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், தனியார் சோலார் நிறுவன ஊழியர்கள் திட்டப் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை கற்கள் மற்றும் கம்புகளுடன் விரட்டிச் சென்று தாக்க முயன்றனர். அப்போது உடனடியாகத் தலையிட்ட காவல்துறையினர் பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி, தனியார் நிறுவன ஊழியர்களைப் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

