விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் நடைபெற்ற சட்டவிரோதப் பட்டாசு விபத்து தொடர்பாகக் காயமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவரை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடைசெய்யப்பட்ட சல்பர் வேதிப்பொருளை விநியோகம் செய்தவர்கள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
செங்கமலப்பட்டியில் இயங்கிவந்த சட்டவிரோதப் பட்டாசுத் தயாரிப்புக் கூடத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை நேரில் சந்தித்த எம்.எல்.ஏ செல்வம், அவரது உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தத் தடைசெய்யப்பட்ட 'சல்பர்' வேதிப்பொருளைப் பயன்படுத்தியதே இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நமது மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பிற்குச் சல்பர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், "வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையைக் காரணம் காட்டி, இதுபோன்ற சட்டவிரோதப் பட்டாசுத் தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விபத்திற்குக் காரணமான நபர், தனக்குச் சொந்தமான 27 சென்ட் நிலத்தில் உள்ள கிணற்றின் மின்சாரத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பட்டாசு தயாரிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளார். தனது குடும்பத்தினருடன் இணைந்து கடந்த 3 மாத காலமாக இத்தகைய சட்டவிரோதப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்" என அவர் விளக்கமளித்தார்.
காவல்துறை நடவடிக்கை குறித்துப் பேசியவர், "சிவகாசி கிழக்குக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதப் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை 11 முதல் தகவலறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட சல்பர் வேதிப்பொருளை இவர்களுக்கு விநியோகம் செய்தது யார், எந்த ஆலை உரிமையாளரிடமிருந்து இது கைமாறி வந்தது என்பது குறித்து 5 நாட்களுக்குள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனிடம் அறிவுறுத்தியுள்ளேன்" என்றார்.
"நமது மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. எனது விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியிலேயே சுமார் 250 முதல் 300 ஆலைகள் இயங்கி வருகின்றன. வேளாண்மைத் துறைக்குப் பயன்படும் உரங்கள் என்ற போர்வையில் சல்பர் இறக்குமதி செய்யப்பட்டு, அதன்பின் பட்டாசுத் தயாரிப்பிற்குத் திசை திருப்பப்படுவதாகத் தெரிகிறது. தவறு செய்தவர்கள் மட்டுமின்றி, தவறு செய்யத் தூண்டியவர்களும், இந்த வேதிப்பொருளை சட்டவிரோதமாக வழங்கியவர்களும் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள். இனிவரும் நாட்களில் நானே நேரில் சென்று தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு, இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன்" என்றும் அவர் எச்சரித்தார்.
அதிகாரிகளின் அலட்சியம் குறித்துப் பேசுகையில், "இச்சம்பவத்தில் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய்த்துறை அலுவலர்களின் அலட்சியம் உள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே தொடர்புடைய எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதிய அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளரும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்குச் சல்பர் விநியோகம் செய்யும் குறிப்பிட்ட நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றை தீவிரமாகக் கண்காணிக்கவும், சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் ஆலோசித்து இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

