விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூர் ஊராட்சியில் பூட்டிக்கிடந்த புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம், செய்திகள் வெளியானதன் எதிரொலியாக அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களால் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
மாத்தூர் ஊராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பநிலைக் கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக, பழைய அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக வாடகை வீட்டிலேயே இமையம் செயல்பட்டு வந்தது. அங்கு போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், குழந்தைகள் விளையாடுவதற்கும் கல்வி கற்பதற்கும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இதனிடையே, அப்பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையிலும், கட்டிடம் திறக்கப்படாமல் இருப்பது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, மையக் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் மற்றும் கல்வி உபகரணங்களை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

