விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சட்டவிரோதமாக இயங்கிவந்த பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில், அனுமதியின்றி தகரக் கொட்டகை அமைத்துச் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலாளரின் பெயர் மற்றும் முகவரி குறித்த விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் 90 சதவீத தீக்காயமடைந்த ராமச்சந்திரன் என்ற தொழிலாளி மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மற்றொருவர் ஆகிய இருவர் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்தும் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்விபத்து குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

