விருதுநகர் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், சிவகாசியைச் சேர்ந்த சில்ட்ரன்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேஷன் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மொத்தம் 18 பள்ளிகளைச் சேர்ந்த 265 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.
4 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் தங்களது ஸ்கேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தி போட்டியிட்டனர்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், அதிக வெற்றிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளிகளுக்கு கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும், இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள், வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

