சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழிற்பேட்டை பகுதியில், சேகரமாகும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் தீயிட்டு கொளுத்துவதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சிவகாசி தொழிற்பேட்டை நுழைவு வாயில் அருகே உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் கழிவுகளைச் சேகரிப்பதற்காக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இந்தத் தொட்டிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த கழிவுகளை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, குப்பைத் தொட்டியிலேயே வைத்து தீ வைக்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், சாலை முழுவதும் அடர்ந்த புகை மண்டலமாக மாறி, அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளின் பார்வை மறைக்கப்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதோடு, விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.
தொடர்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்களால் அப்பகுதியில் தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பைத் தொட்டிகளில் கழிவுகளுக்கு தீ வைக்கும் செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, குப்பைகளை முறைப்படி அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

