விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்பட 10 இடங்களில் இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 38 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர் விளையாட்டுகளான கயாகிங் (Kayaking), கேனோயிங் (Canoeing) உள்ளிட்ட புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பரிசு விவரங்கள்:
மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 ஆகியவற்றுடன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு:
• முதல் பரிசு: ரூ.1,00,000
• இரண்டாம் பரிசு: ரூ.75,000
• மூன்றாம் பரிசு: ரூ.50,000
அதேபோன்று, குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு:
• முதல் பரிசு: ரூ.75,000
• இரண்டாம் பரிசு: ரூ.50,000
• மூன்றாம் பரிசு: ரூ.25,000 ரொக்கப்பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

