செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இந்தியாவை முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், கர்நாடக அரசு இந்தியாவின் முதல் அரசு சார்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதேசமயம், தகவல் தொழில்நுட்ப முதலீடுகளை பெங்களூருவில் மட்டும் குவிக்காமல், மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் புதிய கொள்கையை அடுத்த 100 நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார்.
தொழில்துறை தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பெங்களூருவின் திறமையான மனிதவளம் மற்றும் புதுமை சூழலை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இதற்காக "Vision Beyond Bengaluru" என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, மைசூரு, மங்களூரு, ஹூப்ளி-தார்வாட், பெளள்காவி உள்ளிட்ட நகரங்களில் தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக கூறினார்.
அமைக்கப்பட உள்ள AI பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங், டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ் மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்கள் தொடர்பான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாக செயல்படும். கல்வி நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இந்த பல்கலைக்கழகம் வடிவமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதனுடன், AI ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் AI Hub, ஆழ்ந்த தொழில்நுட்ப (Deep Tech) நிறுவனங்களுக்கான Innoverse தளம் மற்றும் தரவு மைய (Data Centre) கட்டமைப்பை மேம்படுத்தும் புதிய கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கும் AI கல்வியை கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு இந்த நடவடிக்கைகள் மூலம் பெங்களூருவின் மீது உள்ள அழுத்தத்தை குறைத்து, மாநிலத்தின் பிற நகரங்களிலும் வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் AI துறையில் கர்நாடகாவின் முன்னணி இடத்தை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

